Nov 07 2008

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

Tag: தமிழில் (in Tamil), SocietyKarthik @ 8:42 pm

என்னுடைய தமிழ் பதிவுகள் ஓடையின் மூலம் பார்க்கும் பொது சரியாக தெரிவதில்லை, ஆதலால் தயவு செய்து இந்தப் பதிவிலுள்ள தலைப்பை கிளிக் செய்து என் தளத்தில் போய் படிக்கவும்

என் தேசமே,

வளர்ந்த நாடுகளுக்கு குடிபெயர்ந்த உன் முன்னாள் குடிகளின் புகுந்த வீட்டு பாசம் என்னை நெகிழ வைக்கிறது.

அதில் ஒருவன் சொல்கிறான், அமெரிக்காவில் தேர்தல் நாளன்று தன் ஒவ்வொரு நண்பருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஓட்டு போட செல்லுமாறு பிரச்சாரம் செய்தானாம். நல்ல சமூக உணர்வு தான். அனால் இந்த உணர்வு இந்தியாவில் இருக்கும் போது ஏன் இவனுக்கும் தோன்றுவதில்லை. உன்னை ஆள்பவரை தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்கு கூட செல்லாதவன், தான் குடியுரிமை பெற்ற நாட்டுக்காக எப்படியெல்லாம் உழைக்கிறான் பார்.

தான் பயன்படுத்திய டிஷ்யூ காகிதத்தை பயணம் செய்த அமெரிக்க விமானத்தில் போடாமல், மீனம்பாக்கம் சாலையோரத்தில் வீசி எறிபவன் தானே இவன்.

இவன் மட்டுமல்ல, இவனை பொருள் தேட அனுப்பும் இவன் பெற்றோர்கள் இரவு முழுக்க விழித்து அமெரிக்க தேர்தல் முடிவை பார்க்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் இந்தியத் தேர்தல்களில் வாக்களித்திருப்பார்கள் என்பது சந்தேகமே.
People watching US electoral results in Chennai

அடுத்த ஆண்டு GRE எழுத போகும் மாணவர்கள் கூட அமெரிக்க தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள ஆர்வங்காட்டுகிறார்கள்.

இவர்களுக்கு அமெரிக்க குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரை தெரிந்திருக்கிறது, ஆனால் பாவம் இந்திய துணை ஜனாதிபதி யாரென்று தெரியவில்லை. இவர்கள் இந்திய தேர்தல் அடையாள அட்டை வாங்கியதே விசா விண்ணப்பத்தில் இணைக்கத்தானோ?
Students posing with Obama cutout in Chennai

செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட நாசாவின் ரோவரிலிருந்து எடுத்த படங்களை பார்த்து பழகியவன், எங்கள் சந்திராயண் எடுத்தனுப்பிய கருப்பு வெள்ளை படத்தை பார்த்து ஏளனம் செய்கிறான்.

நாசாவில் இருக்கும் இந்தியர்கள் மட்டும் இங்கிருந்து தாய் நாட்டுக்கு சேவை செய்திருந்தால் செவ்வாய் என்ன, கருந்துகளுக்கே ரோவர் அனுப்பியிருக்கலாமே.

இப்படி அமெரிக்க வளர்ச்சிக்கு மூளைகளை உற்பத்தி பண்ணுவதே,
என் தாய் தேசமே, உன் வேலையாகி(சாபமாகி) விட்டது.

கிரீன் கார்டு கோட்டாவில் விடுபட்டவர்கள் தான்
உன் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டுமென்று தலைவிதி.

அமெரிக்கனாவது தன் பொருளை உன்னிடம் விற்று காசாக்குகிறான்.
ஆனால் நீ உருவாகிய மூளைகளை அவனிடம் கொடுத்து, என்ன பெறுகிறாய்?

அறிவாற்றல் மிகுந்த வியத்தகு மூளைகளை படைக்கத் தெரிந்த நீ
அவற்றிக்கு தேசப்பற்று ஊட்டத் தவறுவது ஏன்?

ஊரான் நாட்டை ஊட்டி வளர்த்தால்
நீ தானே வளர்ந்தது விடுவாய் என்ற எண்ணத்திலா?

என் கேரள நண்பன் ஒருவன் சொல்வான். கேரளா மக்கள் பெரிய உழைப்பாளிகள். எங்கு சென்றாலும் தன் உழைப்பினால் உயர்ந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் உழைக்கத் தயங்கும் ஊர் என்ன தெரியுமா? ….. கேரளம் தான். இது எல்லா இந்தியர்களுக்கும் பொருந்தும்.


Sep 06 2008

கூகிள், ஃபிளிக்கர், பிக்காசாவிலிரிந்து ஸ்லைடு ஷோ உருவாக்குவது எப்படி?

Tag: Yahoo Pipes, தமிழில் (in Tamil)Karthik @ 10:39 pm

நண்பன் ரவியின் விருப்பதிற்கேட்ப மூன்று புதிய யாகூ குழாய்களை உருவாக்கியுள்ளேன். இவை கூகிள், ஃபிளிக்கர் மற்றும் பிக்காசா தேடு பொறிகளின் தேடல் முடிவுகளில் உள்ள படங்களை slideshow-வாக காட்டும். இதை உங்கள் தளங்களில் widget ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்று குழாய்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த சுட்டிகளில் செல்லவும்.

Google Image Search, Flickr, Picasa, All in one pipe



பிக்காசாவில் statue of thiruvalluvar என்னும் தேடு சொல்லிற்கான ஸ்லைடு ஷோ இதோ,

Read the rest of this entry »


Jul 16 2008

எங்க தாத்தா குதிருக்குள்ள இல்ல - மாறன் சகோதரர்கள்

Tag: தமிழில் (in Tamil), SocietyKarthik @ 6:21 pm

சன்னுக்கும் (மு.க வின்) சன்னுக்கும் சண்டை வந்தாலும் வந்துச்சு, நிறைய உண்மைகள் வெளி வரத் தொடங்கியுள்ளன. சன் டிவி-யும் திரிக்கபடாத செய்திகளை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. (அதன் பழைய வேலையைத் தான் இப்போது கலைஞர் டிவி செய்கிறது. இந்த இடத்தில் சிலருக்கு இப்படி தோன்றலாம் - ஜெயா டி.வியை விடவா செய்திகளை திரிக்க முடியும். நான் ஒத்துக்குறேன். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயா டி.வியின் செய்திகளை விட சன் டி.வியின் செய்திகளை தான் உண்மைன்னு நம்பி கொண்டிக்கிறது நம்ம ஊரு. அப்படின்னா யாரு அதிகம் சேதாரம் பண்றது?)

இந்த பக்கத்தில் ஜூவியில் வந்த இது பற்றிய கட்டுரையை படிக்கலாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தி.மு.க. மற்றும் சன் குழுமம் எப்படியெல்லாம் தமிழகத்தை ஏமாத்தியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு மூத்த அமைச்சர் - ஆரம்பத்தில் `சுமங்கலி’யை ஆரம்பிக்க மாறன் சகோதரர்கள் எந்த வழியைக் கையாண்டார்களோ அதே வழியைத்தான் அழகிரியின் ராயல் கேபிள் விஷனும் கையாள்கிறது.
ஆக, சன்னும் இப்படித் தான் சுமங்கலியை விழுங்கினார்களா? அப்படின்னா அதுக்கு உடந்தையா இருந்தது அந்த கால தி.மு.க. ஆட்சியா?

தினகரன் வட்டாரம் - ஆரம்பத்தில், நாங்கள் போட்ட கருத்துக்கணிப்பை இன்றுவரை தவறு என்கிறார்கள். உண்மையில் அந்தக் கருத்துக் கணிப்புகள் ஒவ்வொன்றையும் கலைஞரின் ஒப்புதலுக்குப் பிறகே பிரசுரித்தோம்.
அப்படின்னா அதுக்கு பேரு கருத்துக் கணிப்பா இல்ல கலைஞர் கணிப்பா?

தினகரன் வட்டாரம் - கலைஞரின் நள்ளிரவுக் கைதின்போது, `கொல்றாங்க கொல்றாங்க’ என்ற கூக்குரலுக்குச் சொந்தக்காரரான தயாநிதி மாறனால் தலைவருக்கு ஒருபோதும் ஒரு கஷ்டமும் வராது.
இப்பவாவது உண்மை வெளி வந்ததே. நல்லா பண்றாங்கப்பா மிமிக்ரி.

தினகரன் வட்டாரம் - உண்மையைச் சொல்வது என்றால் தினகரன் ஊழியர்கள் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறோம். மாறன் சகோதரர்கள் வாங்கிய தினகரனில் கலைஞருக்குப் பிடிக்காத செய்தி ஏதாவது வந்து விட்டால், அவரே நேரடியாகப் போன் போட்டு காது கூசும் அளவுக்குத் திட்டுவது வாடிக்கை.
நல்லா இருக்கு, கலைஞரின் பத்திரிகை பாசம். தனக்கு சாதகமான செய்தி போட்டால் பாராட்டு, இல்லைன்னா திட்டு.

தினகரன் வட்டாரம் - தி.மு.க. ஆட்சி வருவதற்கு முன் ஜெயலலிதாவின் மிடாஸ் நிறுவனம் பற்றி கன்னாபின்னா வென்று பல குற்றச்சாட்டுகளைக் கூறிய தி.மு.க. நிர்வாகிகள், இப்போது கமுக்கமாக இருக்கக் காரணம் என்ன? மாதாமாதம் அவர்கள் கமிஷன் வாங்குவதைப் பற்றியோ, அல்லது ஒரு மூத்த அமைச்சர் அவ்வப்போது ரகசியமாக சசிகலாவைச் சந்திப்பதைப் பற்றியோ செய்தி போட்டால் அவர்கள் கோபப்படலாம். மாறாக தமிழக எதிர்க்கட்சித் தலைவியின் அறிக்கையை நாங்கள் வெளியிட்டதற்கு இத்தனை கோபமா?
இது புதுசா இருக்கே.

தினகரன் வட்டாரம் - அழகிரி ஏற்பாட்டில் கனிமொழியின் முயற்சியின் பெயரில் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் அரைப் பக்கக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் எங்கள் நடுநிலையை அதாவது ஜெயலலிதாவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விமர்சித்து இருக்கிறார்கள்.
இவுங்க கத்திரி ஆங்கில பத்திரிகைகளுக்கும் போகிறதா?

இப்படி தான் தமிழகத்துக்கு திரித்த செய்திகளை வழங்கியிருக்கிறார்கள். இனியாவது மக்கள் விழித்துக் கொண்டு இது மாதிரி பத்திரிகைகளையும் கட்சிகளையும் ஒதுக்க வேண்டும் (இது ஜெயா டி.வி. மற்றும் அதிமுகவுக்கும் பொருந்தும்). நம்மூரில் மட்டும் தான் இப்படி எல்லா துறைகளிலும்(வாசிக்க: சினிமா, ஊடகம், காவல்) அரசியல் புகுந்துள்ளது.


Jun 04 2008

அடடே கார்ட்டூன்கள் தளம் மற்றும் ஓடை

தினமணியில் வெளியாகும் அடடே கார்ட்டூன்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். தினமும் அந்தக் கார்டூன்களை பார்ப்பதற்காக மெனக்கெட்டு தினமணி.com போய் மூன்று நான்கு கிளிக்குகள் செய்து விளம்பரங்களுக்கு மத்தியில் உள்ள கார்ட்டூன்களை ரசிக்கிறீர்களா? இந்த வேலையை எளிதாக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கான தளம் http://adade-cartoons.blogspot.com, ஓடை http://feeds.feedburner.com/adade-cartoons.

Yahoo Pipes-ல் இது போன்ற ஓடைகளை எளிதாக உருவாக்கலாம். நான் உருவாகிய இந்த Yahoo Pipe, தினமணி தளத்தில் உள்ள கார்ட்டூன்களை சுரண்டி ஓடையாக மாற்றித் தரும். அந்த ஓடையிலுள்ள கார்ட்டூன்கள் பின்னர் http://adade-cartoons.blogspot.com தளத்தில் பதிவுகளாக வெளிவரும். இதில் கொஞ்சம் manual work-ம் உண்டு. கீழே உள்ள படத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

Storing history of feed from Yahoo Pipe

Adade Cartoons blog - How it works? - இந்த பதிவில் அடடே கார்ட்டூன்கள் தளத்தின் இயக்கத்தைப் பற்றி விபரமாக எழுதியுள்ளேன்.


May 09 2008

நான் ஏன் தமிழ்த் தினசரிகளை படிப்பதில்லை?

Tag: தமிழில் (in Tamil), SocietyKarthik @ 5:34 pm

சிறு வயதில் தேடித் தேடி படித்தாலும், கொஞ்சம் வெவெரம் வந்த பிறகு இந்த செய்தித்தாள்களை படிப்பதையே விட்டுவிட்டேன். காரணம்,

  • தரமற்ற செய்திகள்.
  • அதிகபடியான விளம்பரங்கள்.
  • எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமேன்பதே தெரியாது. ரஜினி சம்பந்தப்பட்ட குப்பை செய்தியானாலும் முதலிடம் பிடிக்கும்.
  • கிசு கிசு மற்றும் அனுமானத்தின் அடிப்படையில் வரும் சினிமா மற்றும் விளையாட்டு புள்ளிகளின் காதல், மோதல், கள்ள உறவுகள் பற்றிய செய்திகளுக்கான முக்கியத்துவம்.
    காதலிக்கும் புள்ளிகளை கிசு கிசு மூலம் சேர்த்து வைப்பார்கள். அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டதும் அவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை கிசு கிசுவாக்கி விவாகரத்து வாங்கி கொடுப்பார்கள்.
  • அரசியல் சாயத்துடன் வரும் biased news coverage
  • அர்த்தமற்ற கருத்து கணிப்புகள். 312 பேரிடம் கருத்து கேட்டுவிட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் project செய்வார்கள்.
  • வெளிநாட்டு செய்திகள் என்று ஒரு பக்கம் இருக்கும். அதில் உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் முதலிடம் பிடிக்கும் நாடுகளை பற்றி எழுதுவார்கள். உடனே இந்தியா எத்தனையாவது இடம் வந்ததென்று ஆர்வத்துடன் தேடி பார்த்தால் அதில் இருக்காது. ஏனென்றால் அந்த செய்தியை ஒரு வெளிநாட்டு செய்தி நிறுவனத்திடமிருந்து வாங்கி தமிழாக்கம் செய்து வெளியிடுவார்கள். அது நமது ரசனைக்கேற்பவோ எதிர்ப்பார்புக்கேற்பவோ இருக்காது.
  • முக்கிய நிகழ்வுகளில் சில செய்திகளை சடங்கு போல வெளியிடுவார்கள். உதாரணத்திற்கு, +2 ரிசல்ட் அன்று இது தான் தலைப்பு செய்தி - இந்த முறையும் ஆண்களை விட பெண்களே அதிகம் பேர் தேர்ச்சி. (இதை பற்றிய மற்றொருப் பதிவு)
    சட்டபேரவை கூட்டம் நடக்கிறதா? சபையில் ருசிகரம் என்ற தலைப்பில் அமைச்சர் ஒருவர் அடித்த மொக்கை காமடி இருக்கும்.
  • சில செய்திச் சுருக்கங்கள் - அமைச்சர் தனியார் மருத்துவமனையில் அனுமதி, தனியார் ஹோட்டலில் தீ விபத்து, தனியார் பள்ளியில் மாணவிக்கு தலைமுடியை வெட்டிய ஆசிரியை.
    இப்படி வரும் செய்திகளால் யாருக்கு என்ன லாபம்? தனியார் நிறுவங்களின் பெயர்களை நாளிதழ்கள் வெளியிடுவதேயில்லை. ஏனென்றால் ஓசியில் விளம்பரம் செய்தது மாதிரி ஆகி விடுமல்லவா? அப்படியென்றால் இவர்கள் நடத்துவது ஒரு வியாபாரம் தானே? இவர்களை நான்காவது தூண் என்று எப்படி அழைக்க முடியும்?
  • பிற பத்திரிகைகளை மதிப்பதும் இல்லை அவர்களை பற்றிய செய்திகள் இடம் பெறுவதுமில்லை. மாற்றி மாற்றி புழுதியை வாரி இறைத்துக் கொள்வதில் தினமலர், தினகரன் மற்றும் தினத்தந்திக்குள் ஒரு பனிப்போரே நடந்தது.
  • அரசியல் கட்சிகளுக்கு கொள்கைகள் இருப்பது போல நாளிதழ்களுக்கும் சில கொள்கைகள் இருக்கும் (உதாரணத்திற்கு தமிழீழ எதிர்ப்பு). தத்தம் கொள்கைகளை ஒட்டியே அந்த நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளும் திரிக்கப்படும் அல்லது மறைக்கப்படும். மக்கள் கருத்தை ஒட்டி செய்திகள் இடம் பெறுவதில்லை.

இந்த பதிவை எப்படி முடிப்பதென்று தெரியவில்லை. நல்ல ஊடகம் எப்படி இருக்கும் என்றும் என்னால் வரையறுக்க முடியவில்லை. எனக்கு பிடிக்காத விடயங்களை மட்டும் தொகுத்திருக்கிறேன். இவைகளை தவிர்த்தாலே போதுமானது.


Next Page »


Close
E-mail It